சட்டப்பேரவையில் பட்ஜெட் விவாதம் | எடப்பாடி பழனிசாமி vs நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு!
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்களிடையே சட்டப்பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்றது. அப்போது, தமிழக அரசின் கடன் அதிகரித்தது ஏன் என்பது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி, அமைச்சா்களிடையே பேரவையில் கடும் விவாதம் நடைபெற்றது.
அதன்படி எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
அதிமுக ஆட்சி நடத்தும் பொழுது தமிழ்நாடு மக்கள் கடனாளியாக இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 5 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய்தான் கடன் இருந்தது. கொரோனா காலத்தில் அரசுக்கு 1 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு இருந்தது.
கடன் வாங்குவது தவறல்ல, அதிமுக ஆட்சியில் அதிகமாக கடன் வாங்குகிறீர்கள். தற்போதைய தமிழ்நாடு அரசு வாங்கி இருக்கும் கடன், மூலதன செலவுகளை விட வருவாய்க்கு கொடுக்கும் செலவுகள் தான் அதிகம்” என்று குற்றம் சாட்டினார்.
நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில்:
“மெட்ரோ திட்டங்களுக்கான முழு பணத்தையும் மாநில அரசுதான் கொடுக்கிறது. பல்வேறு மூலதனத் திட்டங்கள், சமூக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் முழுவதும் மாநில அரசின் நிதியில் இருந்துதான் செயல்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.74,000 கோடி வட்டி செலுத்தி வருகிறோம். மாநிலத்தின் நிதி நிலை சீராகவே உள்ளது. தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக கட்டுக்குள் இருக்கிறது. அடுத்தடுத்து இரண்டு பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்ததன் காரணமாகவே சொந்த வருவாய் குறைந்துள்ளது” என்று விளக்கம் அளித்தார்.