Budget 2025 | குடியரசுத் தலைவருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெறுகிறது. ஆண்டின் முதல் தொடர் என்பதால், குடியரசுத் தலைவர் உரையுடன் இந்த தொடர் தொடங்குவது வழக்கம். அதன்படி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று (ஜன.31) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.
தொடர்ந்து, 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். மத்தியில் பாஜக 3வது முறையாக ஆட்சியமைத்தபின் தாக்கல் செய்யப்படும் 2வது பட்ஜெட் இதுவாகும்.
முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்த பாஜக கடந்த ஜுலை மாதம் 23ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தது. தற்போது, 2வது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளதை ஒட்டி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அவருடன் நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி, தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன், மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் குடியரசுத் தலைவரை சந்தித்தனர். இதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்துக்கு செல்லும் நிர்மலா சீதாராமன், மத்திய அமைச்சரவையில் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறவுள்ளார்.