டெல்லி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்துக்கு வெடி குண்டு மிரட்டல் - அவசரமாக தரையிரக்கப்பட்டதால் பரபரப்பு!
தாய்லாந்து நாட்டின் ஃபூகெட் விமான நிலையத்தில் இருந்து 156 பயணிகளுடன் இன்று(ஜூன்.13) டெல்லி நோக்கி ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 379 விமானம் புறப்பட்டது. இந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அவசரமாக தாய்லாந்திலேயே தரையிரக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தொடர்ந்து விமானத்தில் இருந்த 156 பயணிகளும் பத்திரமாக தரையிரக்கப்பட்டு, முழுமையான பாதுகாப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து விமான நிலைய அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெடி பொருட்கள் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இந்த வெடிகுண்டு அச்சுறுத்தல் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக தாய்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாக பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து நேற்று லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே தரைவில் விழுந்து நொறுங்கி, குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி உட்பட மொத்தம் 265 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் நடந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு மட்டும் இந்திய விமான நிலையங்களுக்கு அதிகளவில் வெடிகுண்டு மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளது. இதில் முதல் 10 மாதங்களில் கிட்டத்தட்ட 1,000 புரளி அழைப்புகள் பதிவாகியுள்ளன. இது 2023 ஆம் ஆண்டில் நடந்ததைவிட 10 மடங்கு அதிகமாகும்.