ஆணவப்படுகொலை செய்யப்பட்ட கவினின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் கவின்குமார் (24). இவர் சென்னையில் மென்பொறியாளராக பணியாற்றி வந்த நிலையில் தனது காதலியை பார்ப்பதற்காக கடந்த 27.07.2025ம் தேதி பாளையங்கோட்டைக்கு வந்துள்ளார்.
இதையறிந்த அவரின் சகோதரரான சுர்ஜித்(20), அவரிடம் தனியாக பேச வேண்டும் என கூறி கே.டி.சி நகரில் உள்ள அஷ்டலட்சுமி நகர் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து சுர்ஜித் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த வழக்கில் இதுவரை சுர்ஜித் மற்றும் அவரது தந்தையும் காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வழக்கின் தன்மை மற்றும் முக்கியத்துவம் காரணமாக இந்த வழக்கு சிபிசிஐடி தமிழக அரசு மாற்றி உத்தரவு பிறப்பித்து இருந்தது. இன்று வழக்கு தொடர்பான ஆவணங்கள் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி கொலை நடைபெற்ற நிகழ்வு இடத்திலிருந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்குமார் நவரோஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் இதுவரை இந்த கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் மற்றும் அவரது தந்தை உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுளளனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட மென்பொறியாளர் கவினின் உறவினர்கள் கொலையாளியின் சகோதரி மற்றும் தாய் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி உடலை பெறாமல் போராட்டம் நடத்தி வந்தனர். இதனிடையே போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், 5 நாட்களுக்கு பின் கவினின் உடலை பெற்றுக்கொள்ள அவர்களது உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்த கவினின் உடல் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது உயிரிழந்த கவின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கவின் தந்தை சந்திரசேகர் பேசுகையில், "கவினை கொலை செய்த சுர்ஜித் தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்ய வேண்டும், வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும், இந்த கொலைக்கு முழு காரணம் பாளையங்கோட்டை காவல்துறை ஆய்வாளர் காசிபாண்டியன், அவரை பணி நீக்கம் செய்ய வேண்டும், என் மகன் உயிரிழப்புக்கு அவர் தான் காரணம்" என தெரிவித்துள்ளார்.