தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி, பாஜக ஆட்சியை கொண்டு வர வேண்டும் -பிரதமர் மோடி!
02:40 PM Mar 15, 2024 IST | Web Editor
Advertisement
தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி பேசினார்.
மக்களவை தேர்தலில் 3-வது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கன்னியாகுமரி அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
“ நாட்டை துண்டாட நினைப்பவர்களை காஷ்மீர் மக்கள் தூக்கி எறிந்துள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டிலும் மக்கள் செய்வார்கள். திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட INDIA கூட்டணி கட்சிகளின் கர்வத்தை தமிழ்நாடு அடக்கும். தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சியை அகற்றி பா.ஜ.க. ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
தமிழ்நாட்டு மண்ணில் பெரிய மாற்றத்தை காண்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பாஜக அலை வீசுகிறது. தமிழ்நாட்டில் INDIA கூட்டணி எடுபடாது. திமுக – காங்கிரஸ் கூட்டணி துடைத்தெறியப்படும். திமுக – காங்கிரஸ் INDIA கூட்டணி தமிழ்நாட்டில் எந்தவித வளர்ச்சி திட்டங்களையும் முன்னெடுக்க முடியாது.

திமுக – காங்கிரஸ் INDIA கூட்டணி கொள்கையே ஆட்சிக்கு வந்து கொள்ளை அடிப்பதே இலக்கு ஆகும். காங்கிரஸ் ஆட்சியில் முக்கிய பிரமுகர்களுக்கான ஹெலிகாப்டர்கள் வாங்குவதிலும் கூட ஊழல் செய்தார்கள். கன்னியாகுமரி மாவட்ட மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம் என திமுக – காங்கிரஸ் இணைந்துள்ள INDIA கூட்டணி காத்து கொண்டிருக்கிறது.
மார்த்தாண்டம் – பார்வதிபுரம் இடையே மேம்பாலம் வேண்டும் என குமரி மக்கள் பல ஆண்டுகளாக போராடினார்கள். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் குமரி மக்களின் கோரிக்கை ஏற்கப்படவில்லை. பாஜக அரசு வந்த பிறகு தான் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது. கன்னியாகுமரியில் ஏற்பட்டிருக்கும் ஆதரவு அலையைப் பார்த்து டெல்லியில் எதிர்கட்சிகளுக்கு தூக்கம் கெட்டுவிட்டது.
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Advertisement