ஓரிரு நாட்களில் பாஜக - ஓ.பி.எஸ் - டி.டி.வி கூட்டணி அறிவிப்பு - தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!
"ஓரிரு நாட்களில் பாஜக - ஓ.பி.எஸ் - டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும்" என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் மதுரை ரயில் நிலையத்தில் எம்பிக்கள் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ், திருச்சி எம்பி திருநாவுகரசர், சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள் : இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூ. கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
கூட்டத்திற்குப் பின் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"சென்னை - போடி ரயிலை தினந்தோறும் இயக்க வேண்டும். பொதுமக்கள் நலன் கருதி மதுரை - போடி பாசஞ்ஞ்சர் ரயில் நேரத்தை மாற்ற வேண்டும். மேலும், திண்டுக்கல் - லோயர் கேம்ப் வரை 123 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். விரைவு ரயில்கள் சோழவந்தான் ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் மற்றும் போடி ரயில் நிலையத்தில் கூடுதல் டிக்கெட் கவுண்டர்கள் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீண்டும் தமிழ்நாடு வர இருக்கும் பிரதமர் மோடியுடன் கூட்டணி குறித்த முடிவை எடுக்க வாய்ப்பு உள்ளது. ஓரிரு நாட்களில் பாஜக - ஓ.பி.எஸ் - டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும். தனித்து போட்டியிட வாய்ப்பில்லை, மீண்டும் பிரதமராக மோடி தான் வர வேண்டும் எனும் நிலைப்பாட்டில் இருக்கிறோம். தென் மாவட்டங்களில் எந்த ஒரு நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட தயாராக இருக்கிறேன்"
இவ்வாறு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் கூறினார்.