ஒடிசாவில் அடுத்தடுத்து பிஜு ஜனதா தளத்தில் இணையும் பாஜக தலைவர்கள்!
பாஜகவின் மாநில முன்னாள் துணைத் தலைவரான லேகாஸ்ரீ சமந்தசிங்கர் இன்று பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்தார்.
ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவின் மாநில துணைத்தலைவர் லேகாஸ்ரீ சமந்தசிங்கர் அக்கட்சியில் இருந்து விலகி பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். லேகாஸ்ரீ தனது ராஜினாமா கடிதத்தை மாநில பா.ஜ.க. தலைவர் மன்மோகன் சமாலுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது;
"கடந்த 10 ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சிக்கு வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி உழைத்தேன். நேர்மையாகவும் கடினமாகவும் உழைத்தபோதிலும், என்னால் தலைமையின் நம்பிக்கையை பெற முடியவில்லை. எனவே, இங்கிருந்து நான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.
இங்கிருந்தால் ஒடிசா மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எனது விருப்பமும் தடைபடுகிறது. பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நான் விலகுகிறேன். இதுவரை மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த பாஜகவிற்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த ஏப்.3 ஆம் தேதியன்று ஒடிசாவின் பாஜக துணைத்தலைவர் புருகு பாக்ஸிபத்ரா கட்சியில் இருந்து விலகி, பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார். அவரும் தன்னுடைய பங்களிப்பு கட்சிக்கு தேவையில்லை என்ற காரணத்தினால் விலகியதாக கூறியது குறிப்பிடதக்கது.