"திமுகவை தோற்கடிக்க பாஜக தேவை இல்லை, திமுக தொண்டர்களே போதும்" - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!
நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பாரதிய ஜனதா கட்சி தேவை இல்லை, திமுகவை திமுக தொண்டர்களே தோற்கடிப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக சார்பில் மேற்கு சட்டமன்ற தொகுதியில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது:
"நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை தோற்கடிக்க பாரதிய ஜனதா கட்சி தேவை இல்லை. திமுகவை திமுக தொண்டர்களே தோற்கடிப்பார்கள். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த 219 வாக்குறுதிகளிலும் நிறைவேற்றி விட்டது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த 511 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம் என கூறினால் நான் அரசியலை விட்டு விலகுகிறேன்.
பொய்யை மட்டும் நம்பி திமுக அரசியல் நடத்தி வருகிறது. விஞ்ஞான ஊழலுக்கு கருணாநிதியை சொல்வார்கள். ஆனால் ஊழலில் கருணாநிதிக்கு தந்தையாக அமைச்சர் மூர்த்தி விளங்குகிறார்.
லஞ்ச ஊழலுக்கு எதிராக பாஜக புகார் மட்டும் கொடுத்துவிட்டு சும்மா இருந்து விடாது. ஊழலுக்கு எதிராக வேட்டையாட போகிறோம். எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடந்த மாநாட்டில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருநீரை அழித்துக் கொண்டு பங்கேற்றார். இவ்வாறு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.