மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜக - இந்து முன்னனியினர் தாக்குதல் - சிபிஐ(எம்) கண்டனம்!
திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது பாஜகவினரும் இந்து முன்னனி அமைப்பினரும் தாக்குதல் நடத்தியதற்கு சிபிஐ(எம்) மாநில செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடபட்டுள்ள அறிக்கையில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும், மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பில் கட்சியின் திண்டுக்கல் ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் பேசிக்கொண்டிருந்த போது, இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் பிரச்சாரத்தை நிறுத்துமாறு தகராறு செய்து ஆர்.சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் பாக்கியம், சண்முகவேல், ஆகியோர் மீது கொலைவெறித்தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தொடர்ந்து சரத்குமார் மற்றும் சண்முகவேல் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பெற்று வருபவர்களை பார்ப்பதற்காக மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கட்சியின் தோழர்களை கும்பலாக திரண்டிருந்த பாஜக மற்றும் இந்து முன்னணியினர் அங்கேயும் கடுமையாக தாக்கியுள்ளனர்.
இதில் மாற்றுத்திறனாளியான ஜெயந்தி, பொன்மதி, பெருமாள், விஷ்ணுவர்த்தன் ஆகியோர் படுகாயமடைந்தனர். மக்கள் மத்தியில் தாங்கள், அம்பலமாவதால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜக இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். இந்த கொலை வெறித்தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
தாடிக்கொம்பு மற்றும் திண்டுக்கல்லில் திட்டமிட்டு கொடூரமான தாக்குதலை நடத்திய இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.