ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை திசை திருப்ப பாஜக சதி - ஜெய்ராம் ரமேஷ்!
முன்னாள் மத்திய அமைச்சர் மிலிந்த் தியோராவை பாஜக சதி செய்து, காங்கிரஸில் இருந்து வெளியேற்றியதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டினார்.
கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் மறைந்த முரளி தியோரா. அவரது மகன் மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனாவில் இணைந்தார்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “மிலிந்த் தியோரா வெளியேறியதால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஒரு மிலிந்த் தியோரா வெளியேறுவார். ஆனால் லட்சக்கணக்கான மலிந்த் தியோராக்கள் எங்களுடன் வந்து சேருவார்கள். காங்கிரசை இது எந்த வகையிலும் பாதிக்காது. இந்த முடிவு பிரதமர் மோடியால் எடுக்கப்பட்டுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை” என்று தெரிவித்தார்.
இதுகுறித்துப் பேசிய மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோல், “ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காக பாஜகவால் திட்டமிடப்பட்டதே மிலிந்த் தியோராவின் விலகல்.” என்று கூறினார். மேலும் மிலிந்த் தியோரா ஏற்கனவே இரண்டு முறை தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் என்று கேலி செய்தார்.