பாஜக பெண் நிர்வாகி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை!
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வரும் பாலன் என்பவரது மனைவி பாஜக பிரமுகர் சரண்யா(வயது35). இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் திருமணம் ஆகி 15 வயதில் சாமுவேல் என்ற மகனும், 13 வயதில் சரவணன் என்ற மகனும் உள்ளனர்.
இவர்கள் குடும்பத்துடன் மதுரையில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 2021-ல் சண்முகசுந்தரம் உயிரிழந்த நிலையில் சரண்யா பட்டுக்கோட்டை தாலுகா, கழுகபுலி காடு கிராமத்தைச் சேர்ந்த பாலன்(வயது45) என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு குடும்பத்துடன் உதயசூரியத்தில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். பாலனும், சரண்யாவும் உதயசூரியபுரம் கடைத்தெருவில் அய்யனார் டிராவல்ஸ் மற்றும் சரண்யா ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு (5.05.25) பாலன் மற்றும் சரண்யாவின் மகன்கள் ஆகியோர் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று உள்ளனர். அதேபோல், சரண்யாவும் கடையை பூட்டி விட்டு கடையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது சரண்யா அடையாளம் தெரியாத நபர்களால் கழுத்து மற்றும் தலையின் பின்பக்கம் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்து வந்த வாட்டாத்திகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து சரண்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.