புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடன் பாஜக தேர்தல் பொறுப்பாளர் சந்திப்பு!
புதுச்சேரியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சட்டப்பேரவை தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகின்றது. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 1ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நாளை முடிவுக்கு வருகிறது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இரு அவைகளிலும் அனல் பறக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாதூ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலய் மாலிக், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர், புதுச்சேரி டிஐஜி ஆகியோர் கலந்து கொண்டு புதுச்சேரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.
கடந்த சனிக்கிழமை வேட்பாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் ரங்கசாமியை பாஜகவினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் தற்போது 2-வது முறையாக பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, சட்டப்பேரவை தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் முதலமைச்சர் ரங்கசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.