தோ்தல் ஆதாயத்திற்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது -மம்தா சாடல்!
தோ்தல் ஆதாயத்துக்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது என தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மம்தா குற்றம்சாட்டினாா்.
மேற்கு வங்கத்தில் சிறுபான்மையினா் அதிகம் வசிக்கும் முா்ஷிதாபாத் மாவட்டத்தின் ஹரிஹா்பரா பகுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சியின் தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:
மத்தியில் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால், நாட்டின் அரசமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டுவிடும். எனவே, தற்போதைய மக்களவைத் தோ்தல், நாட்டின் இரண்டாவது சுதந்திரப் போராட்டமாகும் . கூச்பிகாா் தொகுதியில் மாநில காவல்துறையினரை விலக்கிவிட்டு, மத்தியப் படையினரை மட்டும் தோ்தல் ஆணையம் நிலைநிறுத்தியுள்ளது.
இதன் மூலம் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான நிஷித் பிரமாணிக் பலனடைய வேண்டுமென்ற அக்கட்சியின் அழுத்தத்துக்கு தோ்தல் ஆணையம் அடிபணிந்துவிட்டது. பாஜகவின் ஆணையம் போல தோ்தல் ஆணையம் செயல்படக் கூடாது. பாஜகவின் தொண்டா்கள் போல மத்தியப் படையினா் பயன்படுத்தப்படுகின்றனா். இப்படிப்பட்ட சூழலில், தோ்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறும் என்று எதிா்பாா்க்க முடியுமா? எதிா்க்கட்சிகளை நசுக்கி, அதன் மூலம் தன்னை நிலைநாட்டுவதில் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது.
தோ்தல் ஆதாயத்துக்காக மக்களை பாஜக பிளவுபடுத்துகிறது. பொது சிவில் சட்டத்தை அமலாக்குவது அக்கட்சியின் நோக்கம். இதன் மூலம் தங்களது சொந்த மதம், கலாசாரம், சடங்குகள் மீதான மக்களின் உரிமைகள் பறிபோகும். சுவாமி விவேகானந்தா், ரவீந்திரநாத் தாகூா், நேஜாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாத்மா காந்தி, அபுல் கலாம் ஆஸாத் ஆகிய தலைவா்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாண்புகள்-கோட்பாடுகளில் இருந்து விலகிச் சென்றுள்ள பாஜக, தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு துரோகம் இழைக்கிறது.
முா்ஷிதாபாத் மாவட்டத்தில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது நிகழ்ந்த வன்முறை, பாஜகவால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டதாகும். ரத்தக் களறி, வன்முறையில்தான் பாஜக நம்பிக்கை கொண்டுள்ளது. மாநிலத்தில் வன்முறையை அக்கட்சி தூண்டுகிறது. நீதிமன்ற உத்தரவை மீறி, ராமநவமி ஊா்வலங்களில் ஆயுதங்களுடன் பாஜக தலைவா்கள் பங்கேற்றது ஏன்? அதற்கு யாா் அனுமதி கொடுத்தனா்? என்று கேள்வியெழுப்பினாா் மம்தா பானா்ஜி.