பாஸ்போர்ட் பெற பிறப்பு சான்றிதழ் கட்டாயம் - புதிய விதியை வெளியிட்ட மத்திய அரசு!
பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்த) சட்டம் கடந்த 2023-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பாஸ்போர்ட் வழங்குதல், கல்வி நிறுவன சேர்க்கை, ஓட்டுநர் உரிமம் வழங்குதல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருமண பதிவு, அரசு பணி நியமனம், ஆதார் எண் வழங்குதல் ஆகியவற்றுக்கு, ஒரு நபரின் பிறந்த தேதி மற்றும் பிறந்த இடத்துக்கு ஆதாரமாக பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம் என இந்த சட்டம் கூறுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசிதழில், 2023ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள், புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என்றும் மாநகராட்சி, நகராட்சி போன்றவை அல்லது அதற்கு நிகரான அமைப்புகள் வழங்கும் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் மட்டுமே பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அரசிதழ் அறிவிப்பு வெளியான நாளில் இருந்து இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு 2023 அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு பிறந்தவர்களுக்கு இத்தகைய பிறப்பு சான்றிதழ் தேவை இல்லை. பள்ளி சான்றிதழ், நிரந்தர கணக்கு அட்டை, ஓய்வூதிய உத்தரவு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பாஸ்போர்ட் விண்ணப்பத்துக்கு பிறந்த தேதிக்கான ஆவணங்களாக அவர்கள் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, கடந்த 1989-ம் ஆண்டு ஜனவரி 26-ம் தேதிக்கு பிறகு பிறந்தவர்கள் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கும்போது கட்டாயம் பிறப்பு சான்றிதழை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு, பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது ஒரு ஆவணத்தை இணைத்தால் போதும் என பாஸ்போர்ட் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.