பெங்களூரு வெற்றிப் பேரணி - கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூர் பெண் உயிரிழப்பு!
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 17 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாத பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தி வெற்றிப் பெற்றது. இதனால் பெங்களூரு அணியின் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காகப் நேற்று பெங்களூருவில் பேரணிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. 5000 பாதுகாப்பு பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் அளவுக்கடங்காத அதிக ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தின் வாயில்கள் திறக்கப்படாமல் இருந்ததாகவும், சிறிய நுழைவாயில் வழியாக பலரும் உள்ளே நுழைய முயன்றதால் நெரிசல் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்க மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவர்களின் விவரங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.ஆர். காமாட்சி என்ற பெண்ணின் உடல் இன்று உடுமலை வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தின் உடுமலைபேட்டை விவேகானந்தா வித்யாலயம் உயர்நிலைப் பள்ளியின் தாளாளர் மூர்த்தி என்பவரின் மகள் காமாட்சி. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று நடந்த RCB வெற்றி விழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.