பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்... போலீசார் சொன்ன முக்கிய தகவல்!
பெங்களூரு அணியின் முதல் ஐபிஎல் கோப்பை கனவு நிறைவேறியதையடுத்து, அதை கொண்டாடுவதற்கு கடந்த 4ம் தேதி சின்னசாமி மைதானத்தில் வெற்றி பேரணி நடத்தப்பட்டது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 47 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த கர்நாடக நீதிமன்றம் பாதுகாப்பு உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது.
இதனிடையே அம்மாநில அரசு சார்பிலும், பெங்களூரு அணி நிர்வாகம் சார்பிலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் இழப்பீடு அறிவிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு அணி நிர்வாகம் மீது கப்பன் பார்க் காவல் நிலையத்தில், 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாகக் குழு பெயரும் சேர்க்கப்பட்டது.
தொடர்ந்து, பெங்களூரு காவல் ஆணையர் பி. தயானந்தா, கூடுதல் ஆணையர் விகாஸ் குமார், மத்திய துணை ஆணையர் சேகர், ஒரு ஏசிபி & கப்பன் பார்க் காவல் ஆய்வாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பெங்களூரு அணியின் மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டிஎன்ஏ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தைச் சேர்ந்த சுனில் மேத்யூ, கிரண், சுமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 4 பேருக்கு 14 நாட்கள் (ஜூன் 19ம் தேதி வரை) நீதிமன்ற காவல் விதித்து கர்நாடக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 2 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமூக ஆர்வலர் எச்.எம். வெங்கடேஷ் என்பவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலி மீது வழக்குப்பதிவு செய்யகோரி கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரிக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.