மேய்ச்சலுக்கு சென்றவரை தாக்கிய கரடி -112 தையல்களுடன் தீவிர சிகிச்சை!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலைப் பகுதியில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற ராஜமாணிக்கம் (வயது 55) என்பவரை கரடி ஒன்று சற்றும் எதிர்பாராத விதமாக தாக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நிகழ்ந்துள்ளது.
ராஜமாணிக்கம், வழக்கம் போல தனது ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது புதர் மறைவில் இருந்து திடீரென வெளிவந்த ஒரு கரடி, அவரை கடுமையாக தாக்கியுள்ளது. கரடியின் பிடியில் இருந்து தப்பிக்க அவர் போராடிய போதும், பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கரடியை விரட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த ராஜமாணிக்கம் உடனடியாக மீட்கப்பட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது முகத்திலும் உடலிலும் கரடி நகங்களால் ஏற்பட்ட ஆழமான காயங்கள் இருந்தன. சுமார் 112 தையல்கள் போடப்பட்டு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவரது நிலைமை உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் கல்வராயன் மலைப் பகுதி வாழ் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே கரடிகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதும், விளைநிலங்களை சேதப்படுத்துவதும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வனத்துறையினர் கரடிகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மேய்ச்சலுக்கு செல்லும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.