பேனர் சர்ச்சை விவகாரத்தில் நடந்தது என்ன? ஐபிஎல் நிர்வாகம் விளக்கம்!
சென்னை சேப்பாக்கத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் 2024 கடந்த மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து பல மைதானங்களில் நடைபெற்று வந்த போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (மே 26) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் (சேப்பாக்கம்) மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் ராஜஸ்தான் அணியும், ஹைதராபாத் அணியும் மோதிகொண்டன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு175 ரன்களை குவித்தது.
இதன் மூலம் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை விழித்தி இறுதி போட்டிக்கு ஹைதராபாத் அணி தகுதி பெற்றது.
இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குவாலிபயர் முடியும் முன்பே சன்ரைசர்ஸ் வெற்றி பெற்று, கொல்கத்தாவும், ஹைதராபாத் அணியும் களம் காண்பது போல வைக்கப்பட்ட பேனர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, குவாலிபயர் போட்டிக்காக முதல் நுழைவாயிலில் ஹைதராபாத், கொல்கட்டா அணிகள் பேனர்களும் மற்றொரு நுழைவாயிலில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகளின் பேனரும் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி சுற்றுக்கும், இறுதிப் போட்டிக்கும் இடையே ஒரே நாள் இடைவேளை உள்ளதால் தகுதிச்சுற்றுகளுக்கு முன்னேறிய நான்கு அணி பேனர்களும் வைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.