For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பக்ரீத் பண்டிகை - மணிநேரத்தில் கோடிக்கணக்கில் விற்பனை... தமிழ்நாட்டில் களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்!

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.
08:51 AM Jun 06, 2025 IST | Web Editor
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் ஆடுகளை போட்டி போட்டுக்கொண்டு மக்கள் வாங்கி செல்கின்றனர்.
பக்ரீத் பண்டிகை   மணிநேரத்தில் கோடிக்கணக்கில் விற்பனை    தமிழ்நாட்டில் களைகட்டிய ஆட்டுச் சந்தைகள்
Advertisement

பக்ரீத் பண்டிகை, உலக அளவில் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.

Advertisement

இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவர் இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்ததார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இறைவன் அருளால் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்.
இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி  மகனிடம் கூறிய இப்ராஹிம், அவரின் அனுமதியோடு பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் என்னும் வானவரை அனுப்பி இறைவன் அதனை தடுத்து மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இப்ராஹிமிற்கு கட்டளையிட்டான். மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே  தியாகதிருநாள் கொண்டாடப்படுகின்றது.
இதனாலேயே பக்ரீத் திருவிழாவில் ஆடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. மேலும் இந்த நம்பிக்கையின் அடிப்படையில் ஆடுகளை பலியிடுகின்றனர். இதனால் பக்ரீத் பண்டிகையின் போது ஆடுகள் விற்பனை களைகட்டும். அவ்வாறு இந்தாண்டு பக்ரீத்தின் போது களைகட்டிய ஆட்டுச் சந்தைகள் குறித்து இங்கு காண்போம்.

திருமங்கலம் ஆட்டுச்சந்தை

தென்மாவட்டங்களில் முக்கிய சந்தையாக பார்க்கப்படும் மதுரை திருமங்கலம் ஆட்டுச் சந்தை, ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நடைபெறும். அந்த வகையில் இன்று பக்ரீத்தை ஒட்டி களைகட்டிய ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடி வரை விற்பனை நடந்துள்ளது.

செஞ்சி ஆட்டுச்சந்தை

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியிலும் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை  சந்தை நடைபெறும். செஞ்சி பகுதியில் வளர்க்கப்படும் வெள்ளாடுகளை வாங்க ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களிலிருந்தும் மற்றும் தேனி, கம்பம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவது வழக்கம்.

இந்நிலையில் நாளை பக்ரீத் என்பதால், வழக்கத்தைவிட இன்று ஏராளமானோர் சந்தையில் கூடினர். பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இந்த வார ஆட்டுச் சந்தையில், வெள்ளாடுகள் ஜோடி ரூ. 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலும், செம்மறியாடுகள் ரூ. 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரையிலும் விற்பனையானது.

இதனால் அதிகாலை 2 மணி முதல் காலை 7 மணி வரை சுமார் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

புதுக்கோட்டை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆலங்குடி, திருமயம், கைக்குறிச்சி, அண்ணவாசல், விராலிமலை, கந்தர்வகோட்டை அறந்தாங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களும், வியாபாரிகளும் ஆடுகளை போட்டிப் போட்டு கொண்டு வாங்கி சென்றனர். இன்று நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையானது.

செம்பட்டி ஆட்டுச்சந்தை

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஆட்டுச் சந்தை நடைபெறும். இந்த ஆட்டு சந்தைக்கு திண்டுக்கல், மதுரை, தேனி, சின்னாளப்பட்டி, கன்னிவாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் வருவது வழக்கம்.

இந்நிலையில் நாளைய தினம் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் இன்று ஆட்டுச் சந்தையில் வியாபாரம் களைகட்டியது. ஆட்டின் எடைக்கு ஏற்றவாறு ஒரு ஆடு ரூ. 8000 முதல் 10 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் இன்றைய வியாபாரம் ரூ.1 கோடிக்கு மேல் நடைபெற்றதால் வியாபாரிகள் மற்றும் நேரடியாக விற்பனைக்கு வந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags :
Advertisement