For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட தாயை இழந்த குட்டி யானை!

07:00 PM Mar 09, 2024 IST | Web Editor
முதுமலை காப்பகத்துக்கு அனுப்பப்பட்ட தாயை இழந்த குட்டி யானை
Advertisement

சத்தியமங்கலத்தில் தாயை பிரிந்து சுற்றித்திரிந்த குட்டியானை, முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு, குட்டி யானைகள் வளர்ப்பதற்கான கரால் கூண்டில் அடைக்கப்பட்டது. 

Advertisement

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திற்கு உட்பட்ட பண்ணாரி வனப்பகுதியில்
குட்டியுடன் சுற்றித்திரிந்த தாய் யானை உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தது. தாயை சுற்றி சுற்றி வந்த குட்டி யானையை புட்டிப்பால் கொடுத்து பராமரித்து வந்த நிலையில் மற்ற யானைகளுடன் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். இதனையடுத்து குட்டி யானையை மற்ற யானைக்கூட்டத்துடன் வனத்துறையினர் சேர்த்தனர்.

இந்நிலையில், யானை கூட்டத்திலிருந்து வெளியேறிய குட்டி யானை ஆசனூர் அருகே உள்ள ஆரேப்பாளையம் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்ததை அறிந்த வனத்துறையினர் அதனை மீட்டனர். மேலும் குட்டி யானை மிகுந்த சோர்வுடன் காணப்பட்டதால் கால்நடை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளித்தனர். குட்டி யானையின் உடல் நிலையை கருத்தில் கொண்டு முதுமலை யானைகள் வளர்ப்பு முகாமில் வைத்து பராமரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.

இதனைத் தொடர்ந்து குட்டி ஆசனூரில் இருந்து முதுமலை தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமிற்கு கொண்டுவரப்பட்டு குட்டி யானைகள் வளர்ப்பதற்கான கரால் கூண்டில் அடைக்கப்பட்டது. வனக் கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் வனத்துறையினர் யானை குட்டிக்கு சிகிச்சை அளித்து தொடர்ந்து யானை குட்டியை
கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் குட்டி யானையை பராமரிக்க பழங்குடியினர் பாகனான சிவன் என்பவரை
வனத்துறையினர் நியமித்துள்ளனர். குட்டி யானைக்கு தேவையான பால் மற்றும் லாக்டோஜன் உள்ளிட்டவைகளை வழங்கி குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags :
Advertisement