ஈரானுடனான ராஜதந்திர உறவுகளை முறிப்பதாக ஆஸ்திரேலியா அறிவிப்பு!
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின், சிட்னி நகரத்தில் அமைந்திருந்த யூத உணவகத்தின் மீதும் மெல்போர்ன் நகரத்தில் இருந்த யூதக் கோயில் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்தத் தாக்குதல்களுக்கு, ஈரான் அரசுதான் காரணம் என்று குற்றம் சாட்டிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஈரானுடனான ராஜதந்திர உறவுகள் முறிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கான ஈரானின் தூதர் அஹமது சதேகி மற்றும் 3 நிர்வாகிகள் ஆஸ்திரேலியாவை விட்டு 7 நாட்களுக்குள் வெளியேற உத்தரவிட்டுள்ளார்.தொடர்ந்த்து அவர் ஈரானிலுள்ள ஆஸ்திரேலிய அதிகாரிகள் நாடு திரும்பவும் ஈரானில் வசிக்கும் ஆஸ்திரேலியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறவும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 2023 முதல் பாலஸ்தீன விடுதலை ஆதரவு இயக்கமான ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் இதுவரை காசாவைச் சேர்ந்த 61 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இஸ்ரேலை கடுமையாக விமர்சித்திருந்தார். மேலும் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு, இஸ்ரேல் அரசும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.