ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் திருவிழா - லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு!
பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கேரளா மாநிலம் திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் பொங்கல் வழிபாடு வெகு விமரிசையாக இன்று(மார்ச்.13) நடைபெற்றது.
சிலப்பதிகாரத்தில் கோவலன் இறந்த பிறகு மதுரையை எரித்து விட்டு கண்ணகி கோவத்துடன் கொடுங்கலூர்சென்று வானுலகம் அடையும்முன் செல்லும் வழியில் திருவனந்தபுரம் கிள்ளி ஆற்றின் கரையில் ஓய்வெடுத்த இடம் தான் ஆற்றுக்கால் என கூறப்படுகிறது. இங்கு கண்ணகியின் கோவத்தை தணிக்க பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இங்கு பகவதி அம்மன் என்ற பெயரில் கண்ணகிக்கு கோயில் கட்டி
வழிபட்டு வருகின்றனர். ஆண்டு தோறும் மாசி ( மலையாள மாதமான கும்ப மாதம் ) மாதம் திருவிழா வையொட்டி பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். மாசி மாதத்தில் பூரம் நட்சத்திர நாளில் பொங்கல் வழிபாடு நடைபெறுகின்றன. இந்த பொங்கல் திருவிழாவில் கலந்துகொள்ள லட்சக்கணக்கான பெண்கள் திரண்டு வருகின்றனர். சுமார்
20 கிலோமீட்டர் சுற்றளவில் பொங்கல் வைக்கப்படுகிறது. பல லட்சம் பெண்கள்
குவிந்து வழிபாடு செய்யும் இந்த ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் கடந்த 1997 ஆம் ஆண்டு பதினைந்து லட்சம் பெண்கள் மற்றும் 2009 ஆம் ஆண்டு 25 லட்சம் பெண்கள் பொங்கலிட்டு உலக சாதனையை ஏற்படுத்தி கின்னஸ் சாதனை படைத்தனர்.
அந்த சாதனை ஆண்டு தோறும் பொங்கல் வழிபாடு அதிகரித்து
வருவதால் இந்த சாதனை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் விழா கடந்த மார்ச் 5 ஆம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாளையுடன் நிறைவு பெறுகிறது. ஆற்றுகால் பொங்கலையை முன்னிட்டு இன்று திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு கேரளா அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பொங்கலிட வரும் பக்தர்களுக்கு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சுமார் 3000 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். காலை 10.15 மணிக்கு கோயில் தந்திரி ஆலய ஸ்ரீகோயிலில் இருந்து தீபம் எடுத்து வந்து தலைமை பூசாரி முதலில் பண்டார அடுப்பில் பற்ற வைத்து பொங்கல் வழிபாடை துவங்கி வைத்தார். அதன் பின்பு அனைத்து அடுப்புகளிலும் நெருப்பு பற்ற வைக்கப்பட்டது.
திருவனத்தபுரம் நகரப்பகுதி முழுவதுமாக லட்சகணக்கான பெண்கள் பொங்கல் வழிபாடு நடத்தியதால் நகர் பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணபட்டது. மதியம் 1.15 மணிக்கு நிவேத்திய பூஜை செய்யப்பட்டு இந்த பொங்கல் வழிபாடு நிறைவடையும். அப்போது குட்டி விமானம் மூலம் பொங்கல்
வழிபாடுகளில் அர்ச்சனை பூக்கள் தூவபடும். மேலும் ஆலய நிர்வாகம்,
திருவனந்தபுரம் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள்
பகதர்களுக்கு இலவசமாக குடிநீர் மற்றும் உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த பொங்கல் வழிபாட்டு விழாவில் அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உட்பட லட்சகணக்காணோர் பொங்கலிட்டு வழிபட்டனர். கோயிலின் முன்புறம் அமைக்க பட்டுள்ள பச்சை பந்தலில் தோற்றப்பாட்டு என்று அழைக்கப்படும் கண்ணகி பாட்டு நடைபெற்றது. இங்கு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் மற்றும் தொழில் வளம் பெறும், நினைத்த காரியம் நிறைவேறும் என பக்தர்கள் தெரிவித்தனர்.