மாணவர்கள் கவனத்திற்கு... நாளை வெளியாகிறது 10, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்!
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 3 முதல் ஏப்ரல் 15ம் தேதி வரை நடைபெற்றது. இதில் 8.08 லட்சம் பேர் எழுதிய பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ம் தேதி வெளியானது. அதில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முன்னதாக 10, 11-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத் துறையால் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படியுங்கள் : லைவ்-ன் போது டிக் டாக் பிரபலம் சுட்டுக்கொலை.. மெக்சிகோவில் அதிர்ச்சி!
விடைத்தாள்களை திருத்தும் பணிகள் மாநிலம் முழுவதும் கடந்த ஏப்ரல் 21-ல் தொடங்கி 30-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இணையதளத்தில் மதிப்பெண் பதிவேற்றம் உட்பட தேர்வு முடிவுகள் வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில், தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நாளை (மே 16) வெளியாக உள்ளன. இவற்றை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்னையில் காலை 9 மணிக்கு வெளியிடுகிறார். 11-ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 8 லட்சம் மாணவர்களும், 10-ம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்களும் எழுதினர்.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கும், 11ம் வகுப்பு முடிவுகள் மதியம் 2 மணிக்கும் வெளியிடப்பட உள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ ஆகிய இணையதள முகவரிகளில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறியலாம்.
பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பப்படும். அதேபோல், பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கான அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை www.dge.tn.gov.in எனும் வலைதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான முன்னேற்பாடுகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.