கோயிலை ஆக்கிரமிக்க முயற்சி? - நடிகர் வடிவேலுக்கு எதிராக பொதுமக்கள் ஆர்பாட்டம்!
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. இவர் சில காலம் படங்கள் இன்றி இருந்தார். தற்போது மீண்டும் நடிகர் வடிவேலு திரைப்படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். நடிகர் வடிவேலு தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் மாரீசன் படத்திலும் சுந்தர்.சி இயக்கும் கேங்கர்ஸ் படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில், அவர் தனது குலதெய்வ கோயிலை அபகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், திருவேட்டை உடைய அய்யனார் கோயில் இருக்கிறது. இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இக்கோயில் வடிவேலுவின் குலதெய்வ கோயில் என்று கூறப்படுகிறது. அதே போல் காட்டுபரமக்குடி கிராமத்தின் பூர்வீக கோயிலாகவும் இருந்து வருகிறது.
இந்த கோயிலை வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில், கோயில் அறக்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து வடிவேலுக்கு சொந்தமான கோயிலாக
மாற்றம் செய்ய முயற்சி செய்து வருதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காட்டுபரமக்குடி கிராம மக்கள் இன்று (பிப்.09) கோயில் முன்பு திரண்டு வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், கோயிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு அக்கிராம மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.