மக்களவைக்குள் குதித்து தாக்குதல் | மேலும் இருவரைப் பிடித்து விசாரணை!
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் வழக்கில் மேலும் 2 பேரை பிடித்து டெல்லி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன் தினம் பார்வையாளர் மாடத்தில் இருந்த இருவர், அவைக்குள் குதித்து எம்.பி.க்களின் இருக்கைகள் மீது தாவிச் சென்று வண்ணப் புகை வெளியேற்றக்கூடிய சர்ச்சைக்குரிய பொருளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக அவை ஒத்திவைக்கப்பட்டது.
இருவரையும் பிடித்து நாடாளுமன்ற காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் பட்டாசுகளை வீசியது தெரியவந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
நாடாளுமன்ற பாதுகாப்பு மீறல் விவகாரம் தொடர்பான விசாரணை டெல்லி காவல்துறை சிறப்பு பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கைதான 4 பேர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, இதற்கிடையே தான் இந்தச் சம்பவத்தின் முக்கிய மூளையாக செயல்பட்ட லலித் ஜா நேற்று டெல்லி போலீசில் சரணடைந்தார். கொல்கத்தாவைச் சேர்ந்த இவர் ஆசிரியர் ஆவார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மேலும் 2 பேரைப் பிடித்து டெல்லி தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர்களின் பெயர்கள் மகேஷ், கைலாஷ் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் ஏற்கனவே கைதான 4 பேருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் 2 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர்.