பாகிஸ்தானில் ராணுவ வளாகம் மீது தாக்குதல் - குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இருப்பினும் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கதையாகவே இருக்கிறது. அந்த வகையில், பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல் பாகிஸ்தானின் வடமேற்கில் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பன்னு என்ற பகுதியில் உள்ள ராணுவ வளாகம் மீது நடத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் ராணுவ வளாகத்தின் சுற்றுச் சுவர் மீது வெடிகுண்டுகள் நிரப்பிய 2 கார்களை மோத செய்து, அவற்றை வெடிக்க செய்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 3 குழந்தைகள், 2 பெண்கள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 35 பேர் காயமடைந்தனர்.
பலரும் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சுவர் உடைந்த பிறகு பயங்கரவாதிகள் ராணுவ வளாகத்திற்குள் நுழைய முயன்றனர். ஆனால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 6 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர்.