ஏடிஜிபி ஜெயராம் சஸ்பெண்ட் விவகாரம் - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
திருவள்ளூர் மாவட்டம் களாம்பாக்கத்தை சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்தார். இதில், பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை கடத்தியதாக, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பெண்ணின் தந்தை உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த பூவை ஜெகன்மூர்த்தி முன் ஜாமின் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜெகன்மூர்த்தி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், இந்த கடத்தல் வழக்கில் ஜெகன்மூர்த்திக்கு எந்த தொடர்பும் இல்லை என வாதிட்டார். தொடர்ந்து காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தாமோதரன், வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் புரட்சி பாரதம் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் ஜெகன்மூர்த்தியின் பங்கு குறித்து குறிப்பிட்டிருப்பதாகவும், கடத்தப்பட்ட சிறுவன், ஏ.டி.ஜி.பி. ஜெயராமின் காரில் திரும்ப கொண்டு வந்து விடப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
எனவே, இந்த கடத்தலுக்கும் ஏடிஜிபி-க்கும் உள்ள தொடர்பு குறித்து ஜெகன் மூர்த்தியை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளதாக முறையிட்டார். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ஏன் ஏடிஜிபி மீது வழக்கு பதிவு செய்யவில்லை? என கேள்வி எழுப்பினார். மேலும் கட்ட பஞ்சாயத்து செய்ய தான் மக்கள் உங்களுக்கு ஓட்டு போட்டார்களா? என ஜெகன்மூர்த்தியிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து இந்த வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி ஆள் கடத்தலுக்கு அரசு வாகனத்தைப் பயன்படுத்திய வழக்கில் ஏ.டி.ஜி.பி. ஜெயராமை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு ஏ.டி.ஜி.பி. ஜெயராம் அழைத்துச் செல்லப்பட்டார். இதற்கிடையே, ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கைது நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எச்.எம்.ஜெயராம் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி உஜ்ஜல் புயான் தலைமையிலான அமர்வில் இன்று (ஜூன்.18) விசாரணைக்கு வந்தது.
அப்போது எச்.எம்.ஜெயராம் தரப்பில், இந்த வழக்கில் தான் ஒரு எதிர்மனுதாரராக இல்லாத நிலையில் தனக்கு கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தனக்கு சம்மந்தம் இல்லை என வாதிடப்பட்டது. அதற்கு நீதிபதிகள், இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு கூறினார். மேலும், மூத்த காவல் அதிகாரி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாகவும், அவரது இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர், ஏடிஜிபி ஜெயராமின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு தெரிவிப்பதாக கூறினார். உடனடியாக நீதிபதிகள், பணியிட நீக்கத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிய விளக்கத்தை கேட்டு நாளைய தினமே உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்க தமிழ்நாடு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர்.