போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்!
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அடுத்த ஒத்தப்புளி குடியிருப்பு பகுதியில்
செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து
வருகின்றனர். அப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் பெருமாள்(58). இவர் அங்கு படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பாதிக்கப்பட்ட 7 மாணவிகள் சைல்டு லைனுக்கு புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள், பொன்னமராவதி பொறுப்பு டிஎஸ்பி குமார் மற்றும் அரிமளம் காவல்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் மாணவிகள் சாட்டிய பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பெருமாளையிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல மையம் சார்பில் குழந்தைகள் நல அலுவலர்கள் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட உதவி தலைமை ஆசிரியர் மீது புகார் கொடுத்த நிலையில், அவரை கைது செய்த போலீசார், போக்சோ உள்ளிட்ட இரண்டு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து
சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் கைதான உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் சண்முகம் நடவடிக்கை எடுத்துள்ளார்.