முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி சொத்துகள் முடக்கம்!
மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் நிலம் ஒதுக்கப்பட்டதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் வழக்கில் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான 92 சொத்துக்களை முடக்கியதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பி.எம். பார்வதிக்கு மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (முடா), மாற்றுநிலமாக 14 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. அதாவது, சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத நிலத்தை அரசு எடுத்துக்கொண்டு, நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலத்தை வழங்கியதாகவும், இதனால் கர்நாடக அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சித்தராமையாவுக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.