"ஆருத்ரா - பாஜக - ஆம்ஸ்ட்ராங் கொலை" பற்றி விசாரணை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை!
ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் கொலை ஆகிய மூன்றிலும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் திருமாவளவன் எம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிதம்பரம் தொகுதி எம்பியும் விசிக தலைவருமான திருமாவளவன் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பில் திருமாவளவன் எம்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கடிதம் ஒன்றை அளித்துள்ளார். அதில் தெரிவித்துள்ளதாவது..
ஒருபுறம் சமூகவிரோதிகளுக்கு அரசியல் அடைக்கலம் தருவது, இன்னொரு புறம் அத்தகைய சமூக விரோதிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆதரவாகப் பேசுவது என்று நாடகமாடுகிறார்கள். அந்த வேடதாரிகளின் சதித் திட்டத்துக்கு இடமளித்து விடாமல் தமிழ்நாட்டில் சாதியவாதிகளையும், மதவாதிகளையும் கட்டுப்படுத்த உறுதியான எடுக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசைக் நடவடிக்கைகளை கேட்டுக்கொள்கிறோம்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையின் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் கூலிக்கும்பல் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து தண்டிக்க வேண்டும். இவ்வாறு தமிழ்நாட்டில், கூலிக்குக் கொலை செய்யும் கும்பலையும் அவர்களுக்கு அரசியல் புகலிடம் கொடுப்போரையும் இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
முதலமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் எம்பி தெரிவித்ததாவது.
”ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமின்றி, இதை திட்டமிடட்டு நடைமுறைப்படுத்திய கும்பலையும் கைது செய்ய வலியுறுத்தியுள்ளோம். தமிழகத்தில் சட்டஒழுங்கை சீர் குலைக்க சில கட்சிகள் முயல்கின்றன. இதில் பாஜகவிற்கு முக்கிய பங்கு உண்டு. பகுஜன் சமாஜ் கட்சியினரின் கோரிக்கைக்கு முன்பே சி.பி.ஐ விசாரணை கோரியது பாஜக தான்.
ஆருத்ரா கோல்டு விவகாரத்திற்கும் பாஜகவிற்கு தொடர்புண்டு என்று ஒரு வருடமாக பேசப்படுகிறது இந்த வழக்கிலும் ஆருத்ரா வழக்கை தொடர்புபடுத்தி பேசப்படுகிறது. ஆருத்ரா கோல்டு, பாஜக, ஆம்ஸ்ட்ராங் கொலை மூன்றிலும் உள்ள முக்கோணத் தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று முதலமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன்.”
இவ்வாறு திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.