For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆருத்ரா மோசடி வழக்கு - தலைமறைவாக இருந்த ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார்!

12:22 PM Dec 10, 2023 IST | Web Editor
ஆருத்ரா மோசடி வழக்கு    தலைமறைவாக இருந்த ஆர் கே சுரேஷ் சென்னை திரும்பினார்
Advertisement

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில் தொடர்புடைய நடிகர் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில் சென்னை திரும்பி உள்ளார்.

Advertisement

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம்,  முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக் கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, 2,438 கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,  நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீஸ் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பட்டது. இந்நிலையில், சம்மனை ரத்து செய்யக் கோரி, ஆர்.கே.சுரேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படியுங்கள் : டெங்கு, மலேரியா பரவல் கட்டுப்பாட்டில் உள்ளன – அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாத ஆர்.கே.சுரேஷுக்கு எதிராக சென்னை மத்திய பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தனர். இந்த நோட்டீசை திரும்ப பெற உத்தரவிடக்கோரி மற்றொரு வழக்கை தாக்கல் செய்தார். அதில், பட தயாரிப்பு தொடர்பாகவே ரூசோ தம்மை அணுகியதாகவும், அது தொடர்பாக மட்டுமே பண பரிவர்த்தனை நடந்ததாகவும், ஆரூத்ரா மோசாடிக்கும் தமக்கும் தொடர்பில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், தனது மனைவி மற்றும் குழந்தையை கவனித்து கொள்வதற்காக தற்போது துபாயில் உள்ள நிலையில், நாடு திரும்பினால் கைது செய்யும் வகையில் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே நாடு திரும்பியதும் தாம் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதால் அதனை திரும்ப பெற உத்தரவிட வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, டிசம்பர் 10ஆம் தேதி ஆர்.கே.சுரேஷ் நாடு திரும்ப உள்ளதாகவும், இதுதொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி நவம்பர் 8 தேதி பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இன்று துபாயில் தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை வந்தார். ஏற்கனவே, ஆர்.கே,சுரேஷுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் அவரை பிடித்து வைத்துக் கொண்டு விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு ஆஜராக தான் வந்திருப்பதாக ஆர்.கே.சுரேஷ் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து, விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல ஆர்.கே.சுரேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நாளை மறுநாள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரிடம் ஆர்.கே.சுரேஷ் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
Advertisement