அமெரிக்காவில் 'கலைஞர் 100' விழா - அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்பு!
அமெரிக்காவில் 'கலைஞர் 100' விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணம் சான் ஆண்டோனியோ நகரில் ஜூலை 4,5,6 ஆகிய தேதிகளில் அமெரிக்காவில் உள்ள கலைஞர் அறக்கட்டளை சார்பில் விழா நடைபெற்றது. இந்த விழாவில் 4000-க்கும் மேற்பட்ட அயலகத் தமிழர்கள் கலந்து கொண்டனர். ’கலைஞர் 100’ என்ற தொடர் நிகழ்ச்சியின் ஒருபகுதியாக இந்த விழாவை திமுக அயலக அணி ஏற்பாடு செய்தது. இவ்விழாவில் முன்னாள் ஒடிசா முதன்மைச் செயலாளர் பாலகிருஷ்ணன் முன்னாள் மேற்கு வங்காள முதன்மைச் செயலாளர் பாலச்சந்திரன், அயலக தமிழர் நல வாரியத்தின் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி மற்றும் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் வேல்முருகன், ஆளூர் ஷா நவாஸ், தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், மறுவாழ்வு ஆணையர் & வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் உறுப்பினர்கள் கால்டுவெல் வேல்நம்பி, முகமது பைசல் மற்றும் கவிஞர் பாவலர் அறிவுமதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஊடகவியலாளர் செந்தில்வேல் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் சாகித்ய அகாடமி விருது மற்றும் குவெம்பு ராஷ்ட்ரிய புரஸ்கார்த் தேசிய விருது பெற்ற எழுத்தாளர் இமயம் ஆகியோர் பேசிய "எழுத்தாளர் கலைஞர்" என்ற காணொலி காட்சி ஒளிபரப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கலைஞர் 100 நிறைவு விழாவிற்கு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டுகளைத் தெரிவித்து உரையாற்றினார்.