தொடரும் கைது.. ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இதனை நிறுத்த அரசு நடவடிக்க எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போதும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் 30 பேர் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றஞ்சாட்டி 30 மீனவர்களையும் கைது செய்தனர்.
மேலும், மீனவர்களின் 4 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டது. ஒரே நாள் இரவில் 5 விசைப்படகுகளையும் அதிலிருந்த 47 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்துச் சென்ற சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.