For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

நள்ளிரவில் #Samsung தொழிலாளர்கள் கைது... அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்த நிலையில் போலீசார் புதிய நகர்வு!

07:38 AM Oct 09, 2024 IST | Web Editor
நள்ளிரவில்  samsung தொழிலாளர்கள் கைது    அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க இருந்த நிலையில் போலீசார் புதிய நகர்வு
Advertisement

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் 10-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரத்தில் உள்ளது சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனம். தென்கொரிய நிறுவனமான இதில் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்நிறுவனத்தில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர்.

நல்ல லாபத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இந்நிறுவனம், குறைந்த சம்பளத்திற்கு தொழிலாளர்களை அதிக வேலை வாங்குவதாகவும், நடைமுறை சாத்தியமில்லாத இலக்கினை நிர்ணயித்து பலமணி நேரங்கள் கூடுதலாக வேலை வாங்குவதாகவும் , தங்களின் பிரச்சனைகளை களைவதற்காக தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியை தடுப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.

பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிஐடியு தொழிற்சங்கம் உருவாக்கப்பட்டு , சங்கம் பதிவு செய்வதற்காக அனைத்து ஆவணங்களும் வழங்கிய பிறகும், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையோ சங்கத்தை பதிவு செய்ய மறுக்கிறது என்றும், தமிழ்நாடு அரசு அந்நிய நாட்டு சாம்சங் நிர்வாகத்திற்கு சாதகமாக இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன.

இதனால் CITU தொழிற்சங்க அங்கீகாரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே முதலமைச்சரின் உத்தரவின்பேரில் தொழிலாளர்களுடன், அமைச்சர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கிட்டதட்ட 10 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எந்த உடன்பாடும் எட்டப்படாத நிலையில் போராட்டமும் தொடர்கிறது.

இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். மேலும் போராட்ட திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்துக் கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடதக்கது.

Tags :
Advertisement