தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் - மத்திய அரசுக்கு செல்வபெருந்தகை கண்டனம்!
கீழடியில் நடந்த முதல் மற்றும் இரண்டாம் கட்ட அகழாய்வின் வரைவு அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட இந்திய தொல்லியல் துறைக்கு முன்பு அனுப்பப்பட்டது. அதன் பின்னர் அந்த வரைவு ஆய்வறிக்கை வெளியிடப்படாமல் இருந்தது. இதையடுத்து அந்த ஆய்வறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
இது குறித்து மத்திய கலாச்சார அமைச்சகம், கீழடி வரைவு ஆய்வறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவில்லை என்பது உண்மைக்கு புறம்பான செய்தி என மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்தது. மேலும் அந்த அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்வதற்கான நிபுணர்களின் பரிந்துரைகளை குறிப்பிட்டு திருத்தங்கள் தற்போதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அறிவியல்பூர்வ முடிவுகள் தெரிய வேண்டியிருக்கின்றன என்றும் அறிவியல் பூர்வமான முடிவுகள் வந்த பிறகே அங்கீகரிக்க முடியும் என்றும் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தொடர்ந்து திமுக எம்.பி-க்கள் மற்றும் அமைச்சர்கள் மத்திய அரசுக்கு எதிராக கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் கீழடியில் ஆய்வு பணிகள் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணனை மத்திய அரசு பணியிடமாற்றம் செய்தது. இதற்கு தற்போது காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வபெருந்தகை கணடனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ தமிழர்களின் நாகரீகத்தையும், தொன்மையையும் கீழடி ஆய்வின் உயரச் செய்த தொல்லியல் ஆய்வாளர் திரு.அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை ஒன்றிய அரசு பணியிட மாற்றம் என்ற பெயரில் அலைக்கழிக்கிறது. இதன்மூலம் மனதளவில் அவருக்கு பாதிப்பை உண்டாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தில் செயல்படுகிறது. ஒன்றிய அரசு. தமிழர்களின் பெருமையை, உலகிற்கு உரக்க சொல்லிய அவரின் ஆய்வறிக்கையை வெளியிடாமல் இதுபோன்ற செயலில் மத்திய அரசு ஈடுபடுவது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்துள்ளார்.