நெருங்கும் நாடாளுமன்றத் தேர்தல் - பிரச்சாரத்தை தீவிரப்படுத்திய திமுக!
நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேர்தல் தேர்தல் தயாரிப்பு, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என திமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா முழுதும் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. பாஜகவை வீழ்த்த 25-க்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாகியுள்ளன. மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி வருகின்றன.
குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை இறுதி செய்து, தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், INDIA – கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டது. அதன்படி தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி, பரப்புரை மேற்பார்வை ஆகியவற்றை தி.மு.க. இணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை மேற்கொள்வார் எனவும் ஊடக விவாத குழு, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை போன்ற பணிகளை மேற்கொள்ள தி.மு.க. துணை அமைப்பு செயலாளர் ஆஸ்டின் தலைமையிலான குழு செயல்படும் எனவும் அதேபோல சட்டக் குழு மற்றும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ எம்.பி தலைமையிலான குழு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும்” எனவும் தி.மு.க. தலைமை அறிவித்தது.