For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு!

11:45 AM Jan 08, 2024 IST | Web Editor
போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்திற்கு தடை கோரி முறையீடு
Advertisement

போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

போக்குவரத்துத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,  கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஓய்வு பெற்றவர்களுக்கு பஞ்சப்படி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவித்தன.

சிஐடியு,  ஏஐடியுசி,  எச்எம்எஸ் ஆகிய தொழிற்சங்கங்கள் தனியாகவும்,  அண்ணா தொழிற்சங்க பேரவை தனியாகவும் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தன. இதையடுத்து சென்னையில் போக்குவரத்துக் கழக தொழிற்சங்சம், தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் இடையே முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.  இதில் சமரசம் ஏற்படாததால், போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.

இதையடுத்து போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வர வேண்டும் என்று போக்குவரத்துத்துறை உத்தரவிட்டது.  ஆனால், திட்டமிட்டபடி ஜனவரி 9-ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்தன.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் அறிவித்துள்ள காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கறிஞர் பா. ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையீடு செய்தார்.

இதையும் படியுங்கள் : மயிலாடுதுறையில் பலத்த மழை: 25,000 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் கவலை!

அதில் "பொங்கல் பண்டிகை காலங்கள் நெருங்கி வரக் கூடிய சூழலில் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக் அறிவிப்பது சட்டவிரோதம். இதனால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்" என முறையீடு செய்தார்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் நாளை (ஜன. 09) இந்த வழக்கு முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

Tags :
Advertisement