கோவையில் மீண்டும் ஒரு பெண் யானை உயிரிழப்பு - வன ஆர்வலர்கள் வேதனை!
கோவை வனக்கோட்டம் மதுக்கரை வனச்சரகம் கரடிமடை சுற்றுக்கு உட்பட்ட போலாம்பட்டி பிளாக் 1, யானைகல் சராகம் பகுதியில் வனத் துறையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண் யானை ஒன்று நேற்று(மே.22) உடல்நிலை சரியில்லாமல் மெலிந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தது மாவட்ட வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உடனடியாக கோவை வனக் கால்நடை மருத்துவர் மூலம் நேற்று மாலை முதல் அந்த பெண் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11.55 மணியளவில் அந்த பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. தொடர்ந்து வன பாதுகாவலர் தலைமையில் தன்னார்வலர்கள் முன்னிலையில் கோவை வன கால்நடை மருத்துவர் மூலம் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது.பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் யானை உயிரிழப்புக்கு முழுமையான காரணம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை அடிவாரத்தில் குட்டியுடன் வந்த காட்டு யானை ஒன்று உடல்நிலை குறைவால் உயிர் இழந்தது. அதனைப் பிரேத பரிசோதனை செய்து பார்க்க போது, வயிற்றில் 15 மாதமாக குட்டி யானை இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த யானையின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள், காயங்கள் புழுக்கள் போன்றவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வனப்பகுதியில் ஒட்டி பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதால் இது போன்று பல்வேறு வனவிலங்குகள் தொடர்ந்து உயிர் இழப்பதாக வன ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.