கேரளாவில் அமீபா மூளைச்சாவால் மேலும் ஒரு சிறுவன் உயிரிழப்பு!
கேரளாவில் அமீபா மூளைச்சாவு வேகமாக பரவி வரும் நிலையில் மேலும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கேரளாவில் கடந்த சில மாதங்களாக அமீபா மூளைச்சாவு நோய் வேகமாக பரவி வருகிறது. நீர்நிலைகளில் குளிக்கும் போது தேங்கி நிற்கும் நீரில் இருக்கும் அமீபா, மூக்கின் வழியாக மனிதனின் உடலுக்குள் சென்று மூளையை தாக்கும் நோய் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.
கேரளாவில் கண்ணூரில் 13 வயது சிறுமியும், மலப்புரத்தில் 5 வயது சிறுமியும் ஏற்கனவே இந்த நோயால் உயிரிழந்த நிலையில், தற்போது கோழிக்கோட்டில் மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கோழிக்கோடு மாவட்டம் ராமநாட்டு நகர் பகுதியைச் சேர்ந்த அஜித் பிரசாத், ஜோதி தம்பதியரின் மகனான மிருதுல் (12), 7-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இதையும் படியுங்கள் : பீகாரில் மேலும் ஒரு பாலம் சரிந்து விழுந்தது! 15 நாட்களில் 10-வது சம்பவம்!
இந்நிலையில், தனது பள்ளியின் அருகே உள்ள குளத்தில் குளித்து விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். முதலில் அமீபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர், வாந்தி மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அந்த சிறுவனை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மிருதுல் உயிரிழந்துள்ளார். கேரளாவில் அமீபா மூளைச்சாவால் 3-வது உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.