“ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்கு பிறகும் கட்சியை வழிநடத்துபவர் அன்புமணிதான்” - ஜி.கே. மணி!
திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான வன்னியர் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் இன்று துவங்கி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வன்னியர் சங்க நிர்வாகிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கட்சியினுடைய கௌரவத் தலைவர் ஜிகே மணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பூத்தா அருள்மொழி, தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், புதுவை மாநில அமைப்பாளர் கணபதி உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த கட்சியினுடைய கௌரவத் தலைவர் ஜி.கே. மணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த கட்சி வளர்வதற்காக எவ்வளவோ பேர் பல்வேறு தியாகங்களை செய்திருக்கிறார்கள். சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளனர். அடித்தட்டு மக்களுக்கான கட்சியாக தொடர்ந்து அவர்களது முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சி பாட்டாளி மக்கள் கட்சி” என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசும்போது, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இருக்கும்பொழுதும், அவர் மறைவிற்குப் பிறகும் இந்த கட்சியை வழி நடத்துபவர் அன்புமணி ராமதாஸ்தான் என்று கூறினார்.