For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மக்களவைப் போரில் மைசூர் மகாராஜா... யார் இந்த யதுவீர் வாடியார்?

12:18 PM Mar 14, 2024 IST | Web Editor
மக்களவைப் போரில் மைசூர் மகாராஜா    யார் இந்த யதுவீர் வாடியார்
Advertisement

மக்களவை தேர்தல் எனும் போரில் மைசூரு தொகுதியில் மைசூரு மகாராஜாவான  யதுவீர் வாடியாரை பாஜக களமிறக்கியுள்ளது. 

Advertisement

கடந்த 1994 ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் அமைதிப்படை.  இயக்குநர் மணிவண்ணன் - சத்யராஜ் கூட்டணியில் வெளியான அமைதிப்படை திரைப்படம்,  முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டது.  இந்த திரைப்படத்தில் சத்யராஜின் நாகராஜசோழன் கதாபாத்திரம் இன்று வரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமா இருக்கும் வரையில் 'அமாவாசை என்கிற நாகராஜசோழன் MLA' பாத்திரத்தை ரசிகர்களால் மறக்கவே முடியாது.  அந்த அளவிற்கு அரசியல் அலப்பறை அட்டகாசம் செய்த கேரக்ட்டர் அது.  அமைதிப்படை படத்தில் இறுதியில் நாகராஜ சோழன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும்,  சத்யராஜ் கூறும் சோழர் பரம்பரையில் ஒரு எம்எல்ஏ என்ற டயலாக்கை யாரலும் மறக்கவே முடியாது.

அந்த வகையில்,  தற்போது நடைபெறவுள்ள மக்களவை தேர்தலிலும் இதுபோன்ற ஒரு காட்சியை பாஜக ரீ க்ரியேட் செய்ய முயற்சித்து வருகிறது.  அதாவது மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி நேற்று வெளியிட்டது.  மைசூரு மன்னர் பரம்பரையை சேர்ந்த யதுவீர் கிருஷ்ணதத் சாமராஜ வாடியாரின் பெயரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.  அவர் முதன்முறையாக தேர்தல் அரசியலில் களமிறங்கி உள்ளார்.  கடந்த ஆண்டு புதிய நாடாளுமன்றத்திற்குள்  நுழைந்து புகை குப்பிகளை வீசிய நபர்களுக்கு பாஸ் வழங்கிய புகாரில் சிக்கிய சிட்டிங் பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்குப் பதிலாக மைசூர் மக்களவைத் தொகுதியில் வாடியாரை வேட்பாளராக அறிவித்துள்ளது பாஜக.  தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற சிட்டிங் எம்.பி., பிரதாப் சின்ஹாவுக்கு பதிலாக,  இம்முறை,  மன்னர் குடும்பத்தினர் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

அப்படிப் பார்த்தால் மைசூரு தொகுதியில் மன்னர் குடும்பத்தினர் தேர்தல் களம் இறங்குவது இது முதல் முறையல்ல.  மைசூரு மக்களவைத் தொகுதியில்,  ஸ்ரீகாந்த தத்தா நரசிம்மராஜ உடையார் இதற்கு முன்பு காங்கிரஸால் நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.  பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் தலா ஒரு முறை போட்டியிட்டு தோல்வியடைந்தனர்.

மைசூர் அரச குடும்பத்தின் 27வது அரசர் யதுவீர்.

வாடியார் வம்சத்தினர் 1399 முதல் 1947 வரை மைசூரு சமஸ்தானத்தை ஆட்சி செய்தனர்.  மைசூரு கடைசி மன்னர் ஜெயச்சாமராஜேந்திர வாடியார் ஆவார்.  அவர் 1940 முதல் 1947 இல் இந்தியா சுதந்திரம் அடையும் வரை ஆட்சி செய்தார்.  1950 இல் இந்தியா குடியரசாக மாறும் வரை மைசூருவின் அரசராக இருந்தார்.  ஜெயச்சாமராஜேந்திர வாடியாரின் மூத்த மகளான இளவரசி காயத்ரி தேவியின் பேரன் யதுவீர் வாடியார்.

32 வயதான யதுவீர்,  ஜெயராமச்சந்திர வாடியாரின் பேரன்.  திரிபுரசுந்தரி தேவியின் மகனாக ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ் 1992-ம் ஆண்டு மார்ச் 24 அன்று பிறந்தார். யதுவீரின் இயற்பெயர் ஸ்வரூப் ஆனந்த் கோபால்ராஜ் அரஸ்.

யதுவீர் கோபால் ராஜ் உர்ஸ் வாடியார் வம்சத்தின் கடைசி வழித்தோன்றலான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ வாடியாரின் மனைவி பிரமோதா தேவி வாடியாரால் தத்தெடுக்கப்பட்டார்.  அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.  2015 இல், 23 வயதில், மைசூர் புதிய மகாராஜாவாக முடிசூட்டப்பட்டார் யதுவீர்.

யதுவீரின் ஆரம்பக் கல்வி பெங்களூரு வித்யாநிகேதன் பள்ளியில் நடந்தது.  இதன் பின்னர்  யதுவீர் கிருஷ்ணதத் சாமராஜ வாடியார் என்று அழைக்கப்பட்டார்.  யதுவீருக்கு கிட்டார் மற்றும் வீணை வாசிப்பதில் விருப்பம் மிகுந்தவர்.  வரலாற்றில் ஆர்வமுள்ள யதுவீர் டென்னிஸ் விளையாடுவதோடு குதிரைப் பந்தயத்திலும் ஆர்வம் கொண்டவர்.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வியைப் பயின்றார். ஆங்கில இலக்கியம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.  80 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்களைக் கொண்டுள்ள யதுவீர்,  துங்கர்பூர் இளவரசி த்ரிஷிகாவை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.  அவருக்கு ஒரு மகன் உள்ளார்.  திரிஷிகாவின் தந்தை ஹர்ஷ்வர்தன் சிங் பாஜகவின் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர்.

2020 ஆம் ஆண்டு நிலவரப்படி அவரது மொத்த சொத்து மதிப்பு 80 ஆயிரம் கோடி ரூபாய். இதில் பெரும்பாலான நிலம் மற்றும் மூதாதையர் சொத்தாக உள்ளது.  அதில் புகழ்பெற்ற மைசூர் மற்றும் பெங்களூர் அரண்மனைகள் மற்றும் 15 சொகுசு கார்கள் அடங்கும்.  இவரின் குடும்பம் ஆசியாவின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக இன்றும் கருதப்படுகிறது.

சமூக ஊடகங்களில் ஆக்டிவாக உள்ளனர்:

அரச பரம்பரையாக இருந்தாலும்,  யதுவீர் ஒரு நவீன மன்னரின் உருவகமாக இருக்கிறார். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் இவர் தேர்ச்சி பெற்றவர்.  மேலும் அவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார்.  யதுவீர் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்ட தனிப்பட்ட செய்தியில்,  மைசூரு பாரம்பரியத்தின் பாதுகாவலராக தன்னை ஏற்றுக்கொண்டதற்காக சமூகத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அரச குடும்பத்திற்கு கணிசமான செல்வாக்கு உள்ள மைசூர் தொகுதியில் அவருக்கு பா.ஜ.க சீட் வழங்கியுள்ளது.  பழைய மைசூர் பகுதியில் (தென் கர்நாடகா) அரச குடும்பத்திற்கு பொதுமக்களிடம் இன்னும் மிகுந்த செல்வாக்கு உள்ளது.

யதுவீர் முன் உள்ள சவால்கள் என்ன?

  • அரசியலின் நுணுக்கங்களை மேலும் அறிந்து கொள்ள வேண்டும்.
  • JDS-BJP தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.  இரு தரப்பினருடனும் சமரசமாக செல்ல வேண்டும்.
  • அரசியலில் வரக்கூடிய விமர்சனங்களை சமாளிக்க வேண்டும்.
  • பிரதாப் சின்ஹாவின் ஆதரவாளர்களின் அதிருப்தியை சமாளிக்க வேண்டும்.
Tags :
Advertisement