“மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது” - விஜய் வசந்த் எம்.பி. பேட்டி!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “மத்தியில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான இந்த போர் நிறுத்தத்திற்கு நான் தான் காரணம் என்று டிரம்ப் கூறி வருகிறார். ஆனால் நமது பிரதமர் எந்த குரலும் கொடுக்கவில்லை. அவர்கள் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்த பிறகும் மீண்டும் டிரம்ப் நாங்கள் தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும். வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேக் கின் இந்தியா என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த திட்டமும் செயல்படுத்தவில்லை அதை வேகப்படுத்த வேண்டும். கன்னியாகுமரி நான்கு வழிச்சாலை பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று முடிவு செய்து பணி வேகமாக நடக்கிறது. மழை காரணமாக வேலை தாமதம் ஏற்பட்டது வேகப்படுத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வலுவாக கூட்டணியாக உள்ளது. வெற்றி கூட்டணியாக உள்ளது.தேர்தல் தொடர்பாக தலைவர்களை சந்தித்து அதற்கான நல்ல முடிவை தருவார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அதிக இடங்கள் கேட்டு கோரிக்கை வைப்போம் என்றும் ஆட்சியில் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என்று தொண்டர்கள் கோரிக்கையை வைத்துள்ளார்கள் பேச்சுவார்த்தையில் இது தொடர்பாக முடிவு செய்யப்படும்.
தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கூறிய விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை கூறியுள்ளது அந்த தீர்ப்பை அரசியலாக்க கூடாது. அரசியலாக்காமல் திரைப்படத்தை திரைப்படமாக பார்க்க வேண்டும் ஒரு சில கருத்துக்களுக்காக ஒரு திரைப்படத்தை தடை செய்வது சரியல்ல” என்று கூறினார்.