"கல்வி சுற்றுலா அழைத்து செல்வதற்கான அறிவிப்பு விரைவில் வரும்" - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாணவர்களின் கலைத்திறனை வெளி கொண்டுவரும் விதமாக அரசுப் பள்ளியில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் செலவில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. முதலில் மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 282 மாணவர்களுக்கு சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சென் ஜோசப் கல்லூரியில் ஆறு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
குறிப்பாக ஓவியம், சிற்பம், பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், நாடகம், பொம்மலாட்டம் கலைக்கான பயிற்சி அளிக்கப்பட்டு அதில் சிறந்த முறையில் செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மேடையில் பேசியதாவது,
மாணவர்கள் பெறும் மதிப்பெண் மட்டுமல்ல, தனித் திறமை தான் அவர்களை தனித்துவமாக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் கூறுவார். 3 வருடங்களுக்கு முன்பு இந்த திட்டம் தொடங்கப்பட்ட போது 34 லட்சம் பேர் கலந்து கொண்டனர். தற்போது 60 லட்சம் பேர் கலைச்சிற்பி திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. பரதம், நாடகம், ஓவியம், இசை பயிற்சி கடந்த 16ம் தேதியிலிருந்து அளிக்கப்பட்டு வருகிறது.
திறமையை வளர்க்க வாய்ப்பும் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. கலாச்சாரத்தின் மூலமாக பண்பாட்டை வளர்க்கும் திட்டமாக உள்ளது. மாணவர்கள் கலைஞர்களாக மாறியுள்ளனர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் மட்டுமல்ல, ஜஸ்ட் பாஸ் வாங்கும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிப்பது தான் எங்கள் நோக்கம். படிப்போடு சேர்ந்து திறமையை மாணவர்கள் வளர்ப்பது அவசியம். நமது பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு பெற்றோர்கள் ஒப்பிட்டு பார்க்க கூடாது. அரசு பள்ளி மாணவ மாணவியர்களை கல்வி சுற்றுலாவாக கீழடிக்கு அழைத்துச் செல்வதற்கான முயற்சிகள் விரைவில் மேற்கொள்ளப்படும்.
நமது மாநிலத்தின் அகழாய்வு தளங்களை இளம் மாணவர்கள் நேரில் பார்ப்பதற்கும், நமது பண்பாட்டை தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பாக அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் தொல்லியல் தளங்களுக்கு அழைத்துச் செல்வதற்கான திட்டத்தை விரைவில் முன்னெடுக்க உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.