தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது அமமுக!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர் சந்தித்த அவர்,
”டெல்லியில் உள்ள அமித் ஷாவின் செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை. துரோகத்தின் மொத்த உருவமான எடப்பாடி பழனிசாமி கட்சியின் தொண்டர்களின் எண்ணத்தை சீர்குலைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்.எங்கு சென்றாலும் தன்னை முதல்வராக கூறிக் கொள்கிறார். அவரது ஆணவப் பேச்சு முறியடிக்கப்பட வேண்டும். நல்ல முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்காக டிசம்பர் 6ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொண்டர்களின் வேண்டுகோளுக்கிணங்க நல்ல முடிவை எடுக்கப்படும்” என்றார்.
தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது ”நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம். ஆனால் டிசம்பர் 6ம் தேதி முறைப்படி அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் ஓபிஎஸ் வெளியேறி இருந்தார். தற்போது டிடிவி தினகரனும் வெளியேறி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது.
நேற்று தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் அமமுகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து டிசம்பர் மாதத்தில்தான் முடிவு எடுப்போம். தொண்டர்கள் எதிர்பார்க்கும் கூட்டணி அமையும். கடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமராக மோடி வர வேண்டும் என்பதற்காக நிபந்தனையற்ற ஆதரவை அமமுக கொடுத்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் என்பது வேறு. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ளதா என்று நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக பொதுசெயலாளர் டிடிவி தினகரன் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.