ஜி20 ஷெர்பா பதவியை ராஜிநாமா செய்தார் அமிதாப் காந்த்!
இந்தியாவின் G20 ஷெர்பாவாக இருந்த அமிதாப் காந்த் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான அமிதாப் காந்த் ஜூலை 2022 இல் இந்தியாவின் G20 ஷெர்பாவாக நியமிக்கப்பட்டார்.
G20 ஷெர்பாவாக, இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற G20 கூட்டங்களுக்கு அமிதாப் காந்த் தலைமை தாங்கியுள்ளார்.
ராஜிநாமா குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;
“45 ஆண்டுகால அரசு சேவைக்குப் பிறகு, புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு செல்ல முடிவெடுத்துள்ளேன். இந்தியாவின் வளர்ச்சி, மேம்பாடு மற்றும் முன்னேற்றத்திற்கு பங்களிக்க எனக்கு வாய்ப்பளித்த தற்கும், எனது ராஜிநாமாவை ஏற்றுக் கொண்டதற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
G20 ஷெர்பா என்றால் என்ன?
உலகின் முன்னணி பொருளாதார நாடுகள் பங்கேற்கும் வருடாந்திர G20 உச்சிமாநாட்டில் ஒரு நாட்டின் தனிப்பட்ட பிரதிநிதியாக G20 ஷெர்பா என்பவர் இருப்பார். G20 கூட்டமைப்பில் இருக்கும் ஒவ்வொரு நாடும் தங்களுக்கென ஒரு தனிப்பட்ட பிரிதிநிதியை நியமிக்கும். ஷெர்பா என்ற இந்த சொல் நேபாளத்தின் ஷெர்பாக்களிலிருந்து பெறப்பட்டது. இதற்கு மலையேறுபவர்களை வழிநடத்துபவர்கள் என்று பொருள்.