காந்திநகரில் வேட்புமனு தாக்கல் செய்தார் அமித்ஷா!
குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர். இதனையடுத்து, குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும்.
இந்த நிலையில், குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உடன் இருந்தார். இந்த தொகுதியில் காங்கிஸ் சார்பில் சோனால் படேல் போட்டியிடுகிறார். காந்திநகர் தொகுதியில் 2019 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அமித்ஷா 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மத்திய அமைச்சர் அமித்ஷா காந்திநகர் தொகுதியில் தொடர்ந்து 2-வது முறையாக போட்டியிடுகிறார்.