தவெக-வுடன் கூட்டணியா? - ராமதாஸ் விளக்கம்!
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது செய்தியாளர்களை இன்று(ஜூன்.12) சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, “என் கை விரல் கொண்டு என் கண்ணையே குத்திக்கொண்டேன். உயிருள்ள என்னை உதாசீனம் செய்துவிட்டு, என் உருவப் படத்திற்கு உற்சவம் செய்கின்றனர். என்னை நடைபிணமாக்கி நாடு முழுவதும் நடை பயணம் செய்யப் போகிறார்களாலாம். இதெல்லாம் நாடகம். அதில் ஒவ்வொருவரும் நடிகர்கள். அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்ததாக நான் நினைக்கிறேன். இரண்டு ஜாம்பவான்கள் வந்தார்கள் அவரிடம் பேசி எந்த முடிவையும் எட்டப்படவில்லை. இந்த தேர்தல் முடிவும் வரை அவர் அமைதியாக இருந்திருக்கலாம்.
பிரச்சனைகளுக்கு பின்புலம் யாரும் இல்லை. யார் சொன்னலும் அவர் கேட்க மாட்டார். முயலுக்கு 3 கால்கள் என சொல்லும் நிலையில் அவர் உள்ளார். 40, 50 தொகுதிகளை எடுத்து தேர்தல் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் ஆனால் அவர் உழைப்பதற்கு தயாராக இல்லை. தர்மபுரியில் யார் நிற்பது என கேட்கும் போது எப்போது அவர் மட்டுமே நிற்க வேண்டும் தெரிவித்தார். பிறகு தான் நிற்க வில்லை சௌமியாதான் நிற்க போகிறார் என்றார். நான் நமது குடும்ப பெண்கள் யாரும் தேர்தலில் நிற்க வைக்க போவதில்லை என தெரிவித்தேன். பிறகு அவர்கள் என்னிடம் கெஞ்சி கூத்தாடி சௌமியாவை நிற்க வைக்க கையெழுத்து போட வைத்தனர்.
குருமூர்த்தி என்னை இங்கே சந்தித்தார். பிறகு நான் அவரை சென்னை சென்று சந்தித்தேன். 96 ஆயிரம் கிராமங்களுக்கு என் கால்கள் சென்றுள்ளது. பாலு சரியில்லை என்பதால் அவரை மாற்றியுள்ளோம். அவரே அந்த பதவியில் இருக்க வேண்டும் என்பது இல்லை. தேர்தல் முடிந்த பிறகு எல்லாமே அவர் எடுத்து செல்லட்டும். அதுவரை நான் தான் தலைவர். நிர்வாக குழு கூட்டத்தை கூட்டினேன் அதில் ஒருவர் லேசாக அன்புமணியை விமர்சித்தார்.. அப்போது அன்புமணி அவர் மீது கோவப்பட்டார். நிர்வாக குழு உறுப்பினர்கள் நான் சொல்லி தான் பேச சொன்னதாக அவர் நினைத்துக் கொண்டார். அப்போது தான் தலைமை பண்பு அவருக்கு இல்லை என்று நான் சொன்னேன். நான் செயல்தலைவராக இருக்கிறேன் என்று அப்பா சொன்னதை அவர் மத்திர சொல்லாக எண்ணி இருக்க வேண்டும். ராமயணத்தில் ராமனை காட்டுக்குப் போக சொன்னது அவர் தந்தை தான்.
இதையும் படியுங்கள் : “கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் அளவிற்கு…” – உணர்ச்சி பொங்க ராமதாஸ் பேட்டி!
இந்த பிரச்சனை முடிந்து விடும் என்ற நம்பிக்கையில் தேர்தல் ஆணையத்திற்கு தலைவர் பதவி குறித்து எந்த கடிதமும் அனுப்பவில்லை. மக்கள் அனைவரும் என் பக்கம் இருக்கிறார்கள். பாமக ஒரு சாதிக்கான கட்சி அல்ல தமிழ்நாட்டில் 324 சாதிகளுக்காக பாடுபடும் கட்சி. பாமகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என விரும்பும் கட்சிகளுக்கு நல்லது கெட்டது தெரியும். தலைவர் பதவி 3 ஆண்டுகள் மட்டுமே அது முடிந்து விட்டது. மீண்டும் பொதுக்குழு கூட்டி தான் முடிவு செய்ய வேண்டும். பொதுக்குழுவை கூட்டம் அதிகாரம் நிறுவனருக்கு மட்டுமே உள்ளது. அவர் எப்போது முடிவு செய்கிறாரோ அப்போது பொதுக்குழு கூட்டப்படும். கூட்டணி குறித்து நான் தான் முடிவு செய்வேன். தேர்தலை நோக்கி எனது பணி சென்று கொண்டிருக்கிறது.
எல்லாத்திற்கும் ஒரு முடிவு உள்ளது. காலம் போக போக தெரியும். நான் நியமிக்கும் பொறுப்பாளர்கள் எல்லாம் என் பக்கம். இதுவரை தவெக-வுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர்கள் பேசினால் மூத்த தலைவர்களுடன் பேசி முடிவு செய்வோம். எம்.ஜி.ஆர்.மறைந்த பிறகு தான் ஜெயலலிதா அரசியலுக்கு வந்தார். விஜயகாந்த் மறைவிற்கு பிறகு தான் பிரேமலதா வந்துள்ளார். அதற்கு முன் குடும்பத்தில் உள்ள பெண்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை. நான் எடுத்துள்ள முடிவை பல்வேறு அரசியல் தலைவர்களும் சரியான முடிவு என தெரிவிக்கின்றனர்”
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.