"நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணி.. தவறு செய்தால்தான் மன்னிப்பு கேட்பேன்" - கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் திமுக ஆதரவுடன் மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் போட்டியிடுகிறார். இதனையொட்டி, கமல்ஹாசன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதையும் படியுங்கள் : “இன்றிலிருந்து இளைய காமராஜர்”.. மாணவரின் தந்தை சொன்ன வார்த்தை – ஜர்க் ஆகி விஜய் கொடுத்த ரியாக்ஷன்!
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன் பேசுகையில், "மாநிலங்களவையில் மநீமவுக்கு ஒரு இடம் கொடுத்ததற்கு முதலமைச்சரை சந்தித்து நன்றி கூறினோம். மாநிலங்களவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியிருக்கிறார். நாட்டுக்குத் தேவை என்பதால் திமுகவுடன் கூட்டணிக்கு வந்துள்ளோம். மாநிலங்களவையில் தமிழ்நாட்டுக்காக எனது குரல் ஒலிக்கும். ஆனால், தமிழ்நாட்டுக்காக எப்போதும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்" என்று கூறினார்.
கன்னட மொழி விவகாரம் குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், "இது ஜனநாயக நாடு. சட்டத்தையும் நீதியையும் நம்புகிறேன். மேலும் அன்புதான் முதன்மை என்று நம்புகிறேன். கேரள, ஆந்திர, கர்நாடக மக்களின் மீதான என்னுடைய அன்பு உண்மையானது. நான் தவறு செய்திருந்தால்தான் மன்னிப்பு கேட்பேன், தவறே செய்யவில்லை என்றால் கேட்க மாட்டேன். இதுதான் என்னுடைய வாழ்க்கைமுறை" என்றார்.