For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“எனது விருப்பம் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி” - அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த ராமதாஸ்!

“பாஜக கூட தான் கூட்டணி போகனும், அதிமுகவுடன் கூட்டணி போகக்கூடாது என அன்புமணி தடுத்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12:46 PM May 29, 2025 IST | Web Editor
“பாஜக கூட தான் கூட்டணி போகனும், அதிமுகவுடன் கூட்டணி போகக்கூடாது என அன்புமணி தடுத்தார் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
“எனது விருப்பம் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி”   அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்த ராமதாஸ்
Advertisement

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

Advertisement

“பொங்கல் சமயத்தில் முகுந்தன் நியமனம் குறித்து அவரது தாய் கேட்டார். அப்படி கேட்டதும் ஒரு பொருளை தூக்கி அம்மா மீது அடித்தார். நல்ல வேளையாக அது அவர் மீது படவில்லை. இது எல்லாம் ஒரு சேம்பிளாக தான் கூறுகிறேன். அவர் நிறைய தவறுகளை செய்து இருக்கிறார்.

6 வருடத்திற்கு முன்பு பிரதமராக மோடி பதவியேற்கும் போது நான் சென்றிருந்தேன். தங்கி இருந்த இடத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் போது இந்த கட்சியை நான் பார்த்து கொள்கிறேன் என அன்புமணி சொன்னார். அதை கேட்டு 2 சொட்டு கண்ணீர் வடித்தேன். இது 6 வருடத்திற்கு முன்பே நடந்த கதை. கட்சியை ராமதாஸ் பார்த்து கொள்ளட்டும். நீங்கள் மக்களை பார்த்து கொள்ளுங்கள் என கட்சியினர் சொன்னார்கள். நான் எங்கும் வெளியே செல்ல கூடாது. வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்.

108 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். நான் ஆலோசனைக் கூட்டம் நடத்திய போது அதில் 8 பேர் தான் வந்தார்கள். கூட்டத்திற்கு போகக்கூடாது என இவரே போன் செய்து சொல்லிருக்கிறார். என்னை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க போகிறார். அதனால் நீங்கள் போக வேண்டாம் என சொல்லி இருக்கிறார். அப்போதே நான் செத்துவிட்டேன். அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. நான் அப்படி செய்வேனா?.

பொதுக்குழுவில் அன்புமணியை தலைவராக்கினேன். மகாபலிபுரத்தில் ஹோட்டலுக்கு சென்று தங்கி இருந்தேன். அப்போது எனது மருமகள் வந்து என்னை பார்த்தார். மண்டபத்தை பார்த்து ஏற்பாடு செய்துவிட்டேன். நீங்கள் தலைவரை மாற்றி அன்புமணியை நியமிக்க வேண்டும் என சொன்னார். அதற்கு கால அவகாசம் 8 நாள் தான் இருந்தது. 8 நாளில் தலைவரை மாற்றி நியமிக்க வேண்டும் என வற்புறுத்தினார்.

அதற்கும் சம்மதித்து அவருக்கு பட்டாபிஷேகம் செய்து ஆரத்தழுவி ஆனந்த கண்ணீர் விட்டேன். அப்போதும் அந்த கூட்டத்தில் எனது குடும்பத்தை சேர்ந்த பெண்கள் யாரும் கட்சிக்கு வர மாட்டார்கள் என சொன்னேன்.  ஏற்கனவே நான் செய்த சத்தியத்தையும் மீறி குடும்ப உறுப்பினர்களின் வற்புறுத்தலால் எனக்கு விருப்பமே இல்லாமல் அன்புமணிக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்க சம்மதித்தேன். அப்போது சாதா துறையை தான் கொடுத்தார்கள். நான் தான் பெரும் முயற்சி செய்து அவருக்கு சுகாதாரத் துறை அமைச்சர் பதவியை பெற்று தந்தேன்.

இதற்கு ஒரே தீர்வு... நிறுவனர் கொடுத்த செயல் தலைவர் பதவியை முழுமையாக ஏற்று செயல்பட வேண்டும். இல்லை என்றால் தொண்டராக இருந்து கட்சிக்கு பணியாற்றட்டும். இந்த பிரச்சனைக்கு இது தான் ஒரே தீர்வு. இதற்கு அவர் சம்மதித்தால் இதற்கு நல்ல தீர்வு கிடைத்துவிடும்.  இப்போது நடந்த தேர்தலில் கூட்டணி குறித்து பேசினோம். அப்போது அதிமுக கூட்டணியில் தான் கூட்டணி சேர வேண்டும் என கூறி நீயே எடப்பாடியை சந்தித்து பேசு என அன்புமணிக்கு கடிதம் அனுப்பினேன். அவரும் எடப்பாடியிடம் பேசினார்.

எடப்பாடியும் சம்மதித்தார். அப்போது பாஜக கூட தான் கூட்டணி போகனும், அதிமுகவுடன் கூட்டணி போகக்கூடாது என அன்புமணி தடுத்தார். நான் சொன்னதை கேட்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் சில சீட்டுகளில் வெற்றி பெற்று, கட்சிக்கு அங்கீகாரம் கிடைத்து இருக்கும். இந்த காலை அன்புமணியும், அந்த காலை மருமகளும் பிடித்து கொண்டு பாஜகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என கதறி அழுதார்கள்.

இதற்கு சம்மதிக்காவிட்டால் நீங்களே எனக்கு கொல்லி வைத்துவிடுங்கள் என கூறி அழுதார்கள். பாஜகவுடன் கூட்டணி என்பதை செளமியாவே முடிவு செய்துவிட்டார். எனக்கு தெரியாமலேயே பாஜக கூட்டணி என அனைத்தையும் முடிவு செய்துவிட்டார்கள். என்னை நீக்க பொதுக்குழுவிற்கு தான் அதிகாரம் உள்ளது என அன்புமணி சொல்லியிருப்பது குறித்து கேட்ட போது, எப்போது வேண்டுமானாலும் பொதுக்குழு கூட்டி முடிவை தெரிந்து கொள்ளலாம்.

நான் பொதுக்குழுவை கூட்ட தயாராக இருக்கிறேன். மாநில பொதுக்குழு செயற்குழு நிறுவனரால் அழைக்கப்பட்டு அவரின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கூட்டங்களை நடத்த வேண்டும் என கட்சி பைலாவில் உள்ளது. மாநிலங்களவை தேர்தலில் நாங்கள் சீட்டு கேட்க கூடாதா. நானே கூட போட்டியிடுவேன். மாநில இளைஞர் அணி தலைவராக முகுந்தன் தொடர்ந்து செயல்படுகிறார்” என தெரிவித்தார்.

Tags :
Advertisement