செங்கல்பட்டு | ஆசிட் ஏற்றி வந்த லாரி மோதி கோர விபத்து - இருவர் உயிரிழப்பு!
பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு டேங்கர் லாரி ஒன்று ஆசிட் ஏற்றி வந்துக்கொண்டிருந்தது. இந்த லாரி இன்று காலை செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வாயலூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. அதே நேரத்தில், மிதிவண்டியில் வந்த இருவர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, லாரி எதிர்பாராதவிதமாக மிதிவண்டி மீது மோதியதுடன் தடுப்பு சுவற்றில் மோதி தலை குப்புற கவிழ்ந்தது.
இதையும் படியுங்கள் : Gold Rate | அதிரடியாக குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?
இந்த விபத்தில் மிதிவண்டியில் வந்த வாயலூர் பகுதியைச் சேர்ந்த துரை மற்றும் வெளியூரை சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் என இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி கவிழ்ந்ததில் டேங்கரிலிருந்து ஆசிட் கசிந்தது. மேலும் லாரியை ஓட்டி வந்த ஓட்டுநர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சதுரங்கப்பட்டினம் போலீசார் உயிரிழந்த இருவரின் உடல்களையும் உடற்கூராய்விற்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆசிட் ஏற்றி வந்த லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.